கந்து வட்டியை கொடுக்காததால், கடன் வாங்கியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருத்தணி ரெட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தனஞ்செழியன்(39). இவர், கடந்த, 2012ஆம் ஆண்டு அக்கைய்யா நாயுடு சாலையைச் சேர்ந்த பாபுவிடம் (42), ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு, தனஞ்செழியன், பத்து நாள்களுக்கு ஒரு முறை, ரூ.300 வட்டியாக கொடுத்து வந்தார். இதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு தன் தந்தையின் உடல் நலம் சரியில்லாததால், தனஞ்செழியன் மீண்டும் பாபுவிடம், ரூ.1.50 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதன்பின், மாதத்திற்கு ரூ.3000 வட்டி கொடுத்து வந்தாராம்.
இந்நிலையில், சரியாக வட்டிப் பணம் வராததால் இரண்டு நாள்களுக்கு முன்பு பாபு, தனஞ்செழியன் வீட்டிற்கு நேரில் சென்று தகாத வார்த்தைகளால் பேசியும், பணம் கொடுக்காவிட்டால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தனஞ்செயன் அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.