பட்டரவாக்கத்தில் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகளை அகற்றும்படி திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் வடக்குப் பகுதியிலுள்ள பட்டரவாக்கத்தில் ஊர்ப் பொது குளம் உள்ளது. இந்தக் குளத்தை சுற்றி உள்ளூர் அரசியல்வாதிகள் சிலரின் துணையுடன் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதனால் மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
தொடர்ச்சியாக மழை பெய்யும்போது, உள்ளூர்வாசிகள் மழைநீரை வெளியேற்றி விடுகின்றனர்.இதனால் குளம் வற்றிய நிலையில் காணப்படுகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அதிகாரி பாலசுப்ரமணியம், அம்பத்தூர் வட்டாட்சியர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அங்கு, அசம்பாவிதம் எதுவும் நிகழாமலிருக்க அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.