புதுவாழ்வு திட்டத்தில் பணியாற்றியோர் மீண்டும் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு புதுவாழ்வு திட்ட பணியாளர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 10-ஆண்டுகளாக பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், திட்டம் முடிந்ததால் வேலையை இழந்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் இவர்களுக்கு பணிவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்ற வேண்டும்.
மேலும், கடந்த வாரம் "தீன் தயாள் உபாத்தாயா கிராமிய கெüசல்யா யோஜனா' திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை முறைப்படுத்தி மாவட்ட ஆட்சியர் மூலம் பணி ஆணை வழங்க வேண்டும்.
மேலும், பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநில தலைவர் தமிழரசு முன்னிலை வகித்தார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.