அம்பத்தூர் அருகே மீன் வியாபாரியிடம் 2000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்து மீன் வாங்கிய மர்ம நபர் தப்பிச் சென்றார்.
அம்பத்தூர் - ஒரகடம் பிரதான சாலையில் நீண்டகாலமாக மீன் வியாபாரம் செய்து வருபவர் வள்ளி (70). இவர் வழக்கம் போல் திங்கள்கிழமை மீன்வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர், ரூ.400 க்கு மீன் வாங்கிக் கொண்டு, 2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். வள்ளியும் ரூ.400 போக, மீதி ரூ.1,600 ஐ அவரிடம் கொடுத்தனுப்பியுள்ளார்.
வியாபாரம் முடிந்து பணத்தை எண்ணியபோது, 2000 ரூபாய் நோட்டு சாயம் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, சந்தேகமடைந்த வள்ளி அருகிலுள்ளவர்களிடம் விசாரித்தபோது, அது கள்ள நோட்டு என்றும், ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து வள்ளியை மர்ம நபர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வள்ளி கதறியழுதார். இச்சம்பவத்தால் அப்பகுதி வியாபாரிகளிடையே பரபரப்பு நிலவியது.