மாதவரத்தில் பாஜக பிரமுகரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது சடலத்துடன் பாஜகவினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாதவரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(43). இவர் பாஜகவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா அணிச் செயலாளராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கபாலி, அசோக் ஆகியோருக்கும் இடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலாஜியை எதிர்தரப்பினர் உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
எனினும், அவருக்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்ததாகக் கூறுப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மாதவரம் போலீஸார்
பாலாஜியின் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பிரேதப் பரிசோதனை முடிந்து, பாலாஜியின் சடலம் மாதவரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது பாலாஜியை தாக்கியவர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து, கைது செய்ய வலியுறுத்தி சடலத்துடன் மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மாதவரம் காவல் துணை ஆணையர் கலைச்செல்வன், உதவி ஆணையர் ஜெயசுப்பிரமணியன், ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் எம்.வி.சசிதரன், மாவட்டச் செயலாளர் சென்னை சிவா, மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணை ஆணையர் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனால் செங்குன்றம் - மாதவரம் நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.