திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சிப் பகுதியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் மனு திங்கள்கிழமை அளித்தனர்.
திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் முறையிட்டனர் .
இதையடுத்து திங்கள்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேரில் வந்து ஆட்சியர் எ.சுந்தரவல்லியை சந்தித்து திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்தூர் ஊராட்சியை இணைக்கக் கூடாது என மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது: 27 வார்டுகளைக் கொண்ட திருவள்ளூர் நகராட்சியில் ஏற்கெனவே பல்வேறு பணிகள் நிறைவேற்றப்படாமல் மிகவும் பின்தங்கிய நகராட்சியாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெங்கத்தூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பது மேலும் சிரமத்தைக் கொடுக்கும் சுமை என்பதோடு, சிறப்பாக செயல்பட்டு வரும் வெங்கத்தூர் ஊராட்சிக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார்.