பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற நவம்பர் 30}ஆம் தேதிக்குள் விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆர்.கே.பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிருக்கு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள் ஆர்.கே.பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.ரவி தலைமையில் ஆர்.கே.பேட்டை, வங்கனூர், பைவலசா ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் பேசியதாவது: கடன் பெற்ற விவசாயிகள் தவிர்த்து அனைத்து விவசாயிகளும் நடப்பு சம்பா பருவத்தில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 377 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வங்கிகள், கூட்டுறவு சங்கங்களை அணுகி பயன் பெறலாம்.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வறட்சி, மழை, வெள்ளம் ஆகிய பாதிப்புகளால் பயிர் சேதமடைந்தால், ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25,150 காப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு பாதிப்பின்றி சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 30}ஆம் தேதி கடைசி நாள் என்பதால் விரைந்து காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.