பழவேற்காடு ஏரியில் மூழ்கி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன்(30). இவர் பொன்னேரி வட்டம், எண்ணூர் துறைமுகம் அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள, தனியார் கப்பல் கட்டும் நிறுவனத்தில், கிரேன் வாகன ஓட்டுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து பழவேற்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து, பழவேற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களைப் பார்த்து விட்டு அங்குள்ள ஏரியில் குளித்துள்ளார்.
அப்போது விஜயராகவன் ஏரியின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.