கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்முதலம்பேடு பகுதியில் நடைபெற்ற வருவாய்த் துறையினரின் அம்மா திட்ட முகாமில் 25 மனுக்கள் பெறப்பட்டன.
மேல்முதலம்பேடு கிராம சேவை மைய கட்டடத்தில் வருவாய்த் துறையினரின் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், ஊராட்சி செயலாளர்கள் மாரிமுத்து, சாமுவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதர்ஸன், பிரபு, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் மேல்முதலம்பேடு பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்குச் செல்லும் பாதை முழுவதும், தொடர் மழை காரணமாக, சேறும், சகதியுமாய் இருப்பதால் அந்த வழியை சரி செய்யும் வகையில் மணலைக் கொட்டி சீர் செய்ய வேண்டும்.
இதற்காக, அப்பகுதியில் உள்ள கால்வாயில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்தார்.