திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 74.மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை வெயிலின் தாக்கம் கடுமையாகக் காணப்பட்டது. இந்நிலையில், இரவு 8 மணிக்குப் பின்னர், மழைபெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர், காக்களூர், கடம்பத்தூர், போளிவாக்கம், ஈக்காடு, பூண்டி, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி, மிகவும் அவதிப்பட்டனர்.
மழைபெய்ததைத் தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களில் மக்காச்சோளம், நெல் நடவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயத்துக்கும், குடிநீர் தட்டுப்பாடு தீரும் என விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.