திருத்தணியில் இடி தாக்கியதில் கட்டுமானத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருத்தணி ஜெ.ஜெ.நகரில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு திருத்தணி தரணிவராகபுரத்தைச் சேர்ந்த சிவா (26) வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது, திடீரென இடி தாக்கியதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சிவா பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், சிவாவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிவா வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட ஆவின்பால் தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் ஆகியோர் இச்சம்பவம் குறித்து அறிந்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிவாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இடிதாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.