நீர் நிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை சேதப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இவற்றில் தேக்கப்படும் நீரானது, நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்துவதோடு பொதுமக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் இதர உபயோகங்களுக்கும் மிக அத்தியாவசியமாக உள்ளது.
எனவே, நீர் நிலைகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதன் கரைகள், மதகுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.