பொன்னேரி அரசு கல்லூரியில் தவறான தகவல் அளித்து, பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பொன்னேரி உலகநாத நாரயணசாமி அரசு கல்லூரியில் தமிழ்துறை உதவிப் பேராசிரியராக, சென்னையைச் சேர்ந்த பார்த்தீபன் (35) பணியாற்றி வந்தார். இவர், தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி நற்சான்று பெற்றுள்ளதாகவும், மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகவும் கூறி, பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், பார்த்தீபனின் கல்விச் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். இதில், அவர் தவறான தகவல் அளித்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா, கடந்த 22-ஆம் தேதி பார்த்தீபனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
மேலும், அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி, கல்லூரி முதல்வர் கருப்பன் பொன்னேரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வேணுகோபால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.