திருவள்ளூர் அருகே வீடு புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிய 2 பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28). இவர் புதன்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டுக்குள் பாத்திரங்களை உருட்டும் சப்தம் கேட்டதைத் தொடர்ந்து, எழுந்து பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியே ஓடினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ராஜசேகர் சப்தமிட்டார்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மர்ம நபர்களை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், செவ்வாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் அங்கு வந்து, இருவரையும் பொதுமக்களின் பிடியில் இருந்து மீட்டனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆவடியைச் சேர்ந்த விக்டர் (46), விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.