பொன்னேரி அருகே சீரான குடிநீர் விநியோகம் கோரி, கிராம மக்கள், 3 அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி வட்டம், கள்ளூர் ஊராட்சிக்கு உள்பட்ட புதுக்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கிராமத்தில் சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெரிதும் அவதிப்பட்ட கிராம மக்கள், இதுகுறித்து
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்குப்பம் மக்கள் அப்பகுதி வழியாகச் சென்ற 3அரசுப் பேருந்துகளை வியாழக்கிழமை சிறைப்பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் பேருந்து பயணிகள் மிகவும்
அவதிக்குள்ளாயினர்.