புழல் மத்திய சிறைக் கைதிகளுக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
டெக் மஹிந்திரா நிறுவனம், சீஷா தொண்டு நிறுவனம் ஆகியன சார்பில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் தொடக்க விழாவுக்கு கூடுதல் காவல்துறை இயக்குநரும், சிறைத்துறை தலைவருமான சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தார். சிறைத்துறை துணை தலைவரும், சிறைக்கண்காணிப்பாளருமான ஆ.முருகேசன் வரவேற்றார். டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி லவ்லீன்கெக்கர் பேசியதாவது:
ஒரு சிறைவாசிக்கு முழு பயிற்சி அளித்திட ரூ.12 ஆயிரம் வரை செலவு செய்திடவும், ஒரு குழுவுக்கு 50 பேர் என ஆண்டுக்கு 300 பேருக்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முடித்து சிறையிலிருந்து விடுதலையாகி செல்லும்போது, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும், சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோருக்கு கடன் உதவி செய்துதரப்படும். ஓட்டுநர் பயிற்சி மட்டுமன்றி வேறு பல தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் சி.கிருஷ்ணகுமார், சீஷா இயக்குநர் ஜெயக்குமார் டேனியல், உமா, எட்வின், ஜூலி, டெக் மஹிந்திரா மேலாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.