தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கோரி இளம் தம்பதியர் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை தஞ்சம் புகுந்தனர்.
பொன்னேரியை அருகே போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எம்.கண்ணனின் மனைவி மாலாவும் எஸ்.பி. சிபி சக்ரவர்த்தியிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:
நாங்கள் போந்தவாக்கத்தில் குடியிருந்து வருகிறோம். பட்டதாரியான நான் எனது அத்தை மகனான கண்ணனும் நானும் காதலித்து வந்தோம். இருவரும் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை செய்தும் வருகிறோம். கண்ணன் குடும்பத்தினர் என வீட்டிற்கு பெண் கேட்டு வந்தனர். ஆனால், எனது கணவர் ஏழ்மையான நிலையில் இருப்பதால் என் பெற்றோர் அவர்களை உதாசீனம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நாங்கள் கோயிலில் பெரியோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இதையறிந்த எனது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு விடுவதாகவும், அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். என்னால் கிராமத்தில் என் கணவருடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.