உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டுப் பண்ணையத்திற்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் வியாழக்கிழமை வழங்கினார்.
விவசாய உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தி மூன்று மடங்கு லாபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூட்டுப் பண்ணையத்திற்கு ரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர்கள் முனியப்பன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்தணி வேளாண்மை உதவி இயக்குநர் முகமது ரபீக் வரவேற்றார். இதில், எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 7 உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் கூட்டுப் பண்ணையத்திற்கு ரூ.35 லட்சம் மானியத்தில் டிராக்டர், விதையிடும் கருவிகள், நடவு இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசுலு, வேளாண்மை அலுவலர்கள் கணேசன், சம்பத், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.