திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தேசியக் கொடியேற்றி வைத்து, பயனாளிகள் 83 பேருக்கு 52.1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் 72-ஆவது சுதந்திரதினவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி வைத்தார். அதையடுத்து மூவர்ண பலூன்களையும், சமாதானப் புறாக்களையும் பறக்கவிட்டார். பின்னர் காவல் துறையினர் மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.1,12,750 நிதி உதவி, 5 பேருக்கு ரூ.42 ஆயிரத்தில் விலையில்லா தையல் இயந்திரங்கள், இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 15 பேருக்கு ரூ.7.50 லட்சம் உதவி, தாட்கோ மூலம் 2 பேருக்கு ரூ.16,57,834 மதிப்பில் வாகனக் கடன் உதவி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 24.40 லட்சம் உதவி, 5 பேருக்கு ரூ.25,090 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு ரூ.7,400 மதிப்பில் உபகரணங்கள், தேசிய வேளாண் பாதுகாப்புத் துறையின் மூலம் 13 பேருக்கு ரூ.1,45,060 மதிப்பில் வேளாண் கருவிகள், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பேருக்கு ரூ.21ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள், 25 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான உத்தரவு என மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.52.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களைப் பாராட்டி நற்சான்றுகளையும் அவர் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, சார்-ஆட்சியர் ரத்னா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் குணாளன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தில்லைநடராஜன், சிலம்பரசன், பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.