கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ம.பொ.சி. நகர் பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் காணாமல் போவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் மூன்று பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையின்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரை மடக்கி சோதனையிட்டனர்.
விசாரணையில் அவர்கள் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து, புது கும்மிடிப்பூண்டி ஆஞ்சநேயர் கோயில் பகுதியைச் சேர்ந்த குமார் (18), வெட்டுக் காலனி புதுநகர் இதயதுல்லா(18), ஜெய்ஹிந்த் நகர் 17 வயது சிறுவன் மற்றும் ம.பொ.சி. நகர் ராஜ்குமார்(22) ஆகியோரை கைது செய்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அப்பு என்பவரைத் தேடி வருகின்றனர்.