பெரியபாளைம் பவானி அம்மன் கோயில் முன்பு சிறு வியாபாரிகளிடம் அதிக வரி வசூலிக்கும் முன்னாள் அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரியபாளையத்தைச் சேர்ந்த ஆலய சீர்திருத்த சங்கத்தினர், (தகுதிநீக்கம் செய்யப்பட்ட) பூந்தமல்லி எம்எல்ஏ டி.ஏ.ஏழுமலை தலைமையில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குவது பவானி அம்மன் திருக்கோயில்.
இக்கோயிலின் வெளிப்புறம் வேப்பிலை கட்டுதல், காது குத்துதல், பூஜைப் பொருள்கள் விற்பனை, அக்னி சட்டி எடுக்க உதவுதல், பூக்கள் மற்றும் மாலைகள் ஆகிய வியாபாரத்தை நம்பி ஏராளமான சிறு
வியாபாரிகள் உள்ளனர்.
தற்போது, இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்
நிலையில் முன்னாள் அறங்காவலர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.
இவர், அறநிலையத்துறை அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சிறு வியாபாரிகளிடம் நாள்தோறும் ரூ. 50, ரூ.100 என வரி வசூலித்து வருகிறார்.
இதனால், பூஜைப் பொருள் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையில் ஆட்சியர் தலையிட்டு, முன்னாள் அறங்காவலர் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.