திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
புட்லூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பாதையில் இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரப்பு செய்திருந்தனர். இதனால், பாதையில் பக்தர்களும், வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதைக் கருத்திற்கொண்டு பாதையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
இதன் அடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர்
உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவல் ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீஸார் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் இருந்த 110 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்கள் இனி பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.