பேருந்துக் கட்டணத்தை அரசு குறைக்கும் வரை போராட்டத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அரசுப்பேருந்து களில் கட்டண உயர்வைக்கண்டித்து செவ்வாய்க்
கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:மத்தியஅரசுஒரே இரவில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாததாகஆக்கியது. அதேபோன்றுஒரே இரவில் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையில் அதிமுக அரசு உயர்த்தியது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சியில் இருந்தபோது குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், தற்போதைய அரசு பலமடங்கு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டணத்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தாங்களாகவே முன்வந்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் போராடி வருகின்றனர்.
பேருந்துக் கட்டண உயர்வுக்கு திமுக உள்பட எதிர்க்கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு கட்டங்களாகப் போராடினோம். இதையடுத்து ரூபாய் கணக்கில் கட்டணத்தை உயர்த்திவிட்டு, பைசா கணக்கில் குறைத்து இந்த அரசு கபடநாடகமாடுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்காமல் எக்காரணம் கொண்டும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்.
இதுபோன்று கட்டண உயர்வுக்கு அரசின் நிர்வாகத்திறமையின்மையே காரணமாகும். மேலும், போக்கு
வரத்து கழகங்களில் உதிரி பாகங்கள் வாங்குதல், அரசுத்துறைகளில் பணியிடங்கள் நிரப்புதல், வளர்ச்சித்திட்டங்கள்உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம். அதன் அடிப்படையில் பல்வேறு வெளிமாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அந்த அறிக்கையில் 27 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையை தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அளித்துள்ளேன். ஏற்கெனவே 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இது ஜோசியம் கேட்டு சொல்லவேண்டியது இல்லை. அப்போது, காட்சி மாறும் , இந்த ஆட்சியின் அவலம் எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டும், சட்டப்பேரவையில் படம் வைத்து பேரவை மாண்பின் மரபை கெடுத்து விட்டனர். இதுபோன்ற காரணங்களால் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநர் ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை.
எதிர்கட்சியான எங்களைத்தான் பொதுமக்கள் திட்டுகிறார்கள். இதுபோன்ற நிலையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அதேபோல், கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரவும் மாட்டோம். தேர்தலை சந்தித்து ஜனநாயக முறையில் ஆட்சியை அமைப்போம் என்றார் அவர்.
கூட்டத்தில் மாநில சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.