குறைதீர் நாள் கூட்டத்தில் 6 பேருக்கு ரூ.1 லட்சத்து 570 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடம் ஆட்சியர் மனுக்களைப் பெற்றார்.
இதில், நிலம் தொடர்பாக - 114, சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக -53 மனுக்கள் உள்பட மொத்தம் 324 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
தொடர்ந்து, அந்தந்த துறை அதிகாரிகளிடம் மனுக்களைப் பிரித்து அளித்து குறிப்பிட்ட நாள்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, ஆட்சியர் விருப்ப உரிமை நிதி திட்டத்தின் கீழ், தாட்கோ மூலம் 5 பேருக்கு சிறு தொழில் தொடங்க தலா ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.570 மதிப்பிலான ஊன்றுகோல் என மொத்தம் ரூ.1 லட்சத்து 570 மதிப்பிலான நல உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சீ.ஜானகிராமன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.