கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக, புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
குருவராஜகண்டிகை அருகே காரம்பேடு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி காரம்பேடு பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, புதன்கிழமை வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர் மதிவாணன், கவரப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கம், ஈகுவார்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் முன்னிலையில் டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சார்பாகவும், டாஸ்மாக் அதிகாரிகள் சார்பாகவும் கருத்துகள் முன் வைக்கப்பட்டன.
தொடர்ந்து டாஸ்மாக் கடையை 15 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.