சென்னை, கொளத்தூரில் வீடு புகுந்து100 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார்
தேடி வருகின்றனர்.
கொளத்தூர் சரோஜினி நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முரளிபாஸ்கர் (39). இவர் கொரட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முரளிபாஸ்கர், தனது மனைவி புவனேஸ்வரி, மகன்கள் விஜயஹரி, சாய்விஷ்ணு ஆகியோருடன் பிப்ரவரி 12-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தார்.
13-ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 100 சவரன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, முரளிபாஸ்கர் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனியசேகரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரியில்...
மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட திருவெள்ளைவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா(36), தேவம்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இருவரும் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுள்ளனர்.
பிற்பகலில் பழனி வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பழனி அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.