அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் நடத்திய வேலை வாய்ப்பிற்கான வளாக நேர்காணலில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற கிராமப்புற பொறியியல் மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கிராமப்புறத்தில் இருந்து வந்து கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் படித்து வரும் கணினி பொறியியல் மாணவி ஏ.அனிதா, மின்னணு தொலைத் தொடர்பு பொறியியல் மாணவி ஜி.மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் இருவரும் பல்வேறு கட்டத் தேர்வுகளில் வென்று இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்ய தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்த மாணவிகளுக்கு டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்குத் தலைமை வகித்த டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசியபோது, கிராமப்புறத்தில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களாலும் புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற முடியும் என்பதை இந்த மாணவிகள் நிரூபித்துள்ளனர் என்றார்.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் பழனி, கணினி பொறியியில் துறைத் தலைவர் ஜனார்த்தனம், மின்னணு தொலைத் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் ஜெயஅனுசுயா, வேலை வாய்ப்பு அலுவலர் பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.