சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் சார்பில் நடைபெற்ற சிந்தனை நாள் விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
சாரண, சாரணியர் இயக்கத்தை தோற்றுவித்த ராபர்ட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன் பவுல் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச சிந்தனை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார். இப்பேரணி வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டன. திருவாலங்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீழ்மணப்புதூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பட்டாபிராம்- சத்திரம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 16 பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.