மீஞ்சூர் கடை வீதியில் கழிப்பறை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.
மேலும், இச்சாலையில் மீஞ்சூர் பேருந்து நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலகம், மீஞ்சூர் காவல் நிலையம் ஆகியன அமைந்துள்ளன.
மீஞ்சூரை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மீஞ்சூர் கடை வீதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மீஞ்சூர் கடை வீதியில் இதுவரை கழிப்பறை கட்டடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிப்பறைக் கட்டடம் கட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் கழிப்பறைக் கட்டடம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.