கும்மிடிப்பூண்டி அருகே, ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பேடு கிராமத்தில் இந்தியா-1 என்கிற தனியார் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை வியாழக்கிழமை நள்ளிரவில் சில மர்ம நபர்கள் கடப்பாறையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக வந்த டாஸ்மாக் கடை ஊழியர் ஆறுமுகம், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு ஏடிஎம் மையத்துக்கு வந்தார்.
இதைக்கண்ட மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.