திருவள்ளூர் அருகே அமைக்கப்பட்டிருந்த அம்மா திட்ட ஆயத்த கழிப்பறைகள் தீயில் கருகி நாசமாகின.
திருவள்ளூர் நகராட்சியில் குளக்கரை, காக்களூர் சாலை, பெரியகுப்பம் பேருந்து நிலையம், 5-ஆவது வார்டில் உள்ள ஹைவேலி அகரம் உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.41 லட்சம் மதிப்பிலான அம்மா திட்ட ஆயத்த கழிப்பறைகள் கடந்த 2015-இல் அமைக்கப்பட்டன. இந்த கழிப்பறைகள் முழுவதும் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இதில், ஹைவேலி அகரத்தில் அமைக்கப்பட்ட இருபாலருக்கான ஆயத்த கழிப்பறைகள் 24 மணிநேரமும் தண்ணீர் வசதியுடன் செயல்பட்டு வந்தன.
இந்த கழிப்பறைகளை அங்குள்ள மயானத்திற்கு வருவோரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென கழிப்பறைகள் தீயில் கருகி நாசமாகின.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து, ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த கழிப்பறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா அல்லது எரிக்கப்பட்ட குப்பைகளில் இருந்து தீ பரவியதா என நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.