அம்பத்தூர் அருகே ஒரகடம் பகுதியில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த ஒரகடம் கிராம பொதுமக்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
ஒரகடம் காந்தி நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வந்தது. இதனால், குடிகாரர்களால் அவதிப்பட்ட கிராம மக்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்தக் கடை அகற்றப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் மதுக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால், இப்பகுதியில் மீண்டும் மதுக் கடையை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.