இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலப்பிரச்னையைகஈ தீர்த்து வைக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை முதியவர் ஒருவர் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (76). மாற்றுத் திறனாளியான இவர் ஓவியம் வரையும் தொழில் செய்து வருகிறார்.
அரசு சார்பில் அவருக்கு முதியோர் சுய தொழில் செய்யும் திட்டத்திற்காக இடம் வழங்கப்பட்டது. அந்த இடத்தை ஓவியம் வரையும் கூடமாக ராமசாமி பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, அரசால் வழங்கப்பட்ட அந்த நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டு ராமசாமியை விரட்டி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி ராமசாமி கடந்த 2 ஆண்டுகளாக வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவகம், முதல்வர் தனிப்பிரிவு உள்பட அனைத்து அலுவலங்களிலும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, அலுவலக வளாகத்தில் ராமசாமி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக அவரை போலீஸார் திருவள்ளூர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த தீக்குளிப்புச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.