அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், மாணவர்கள் ஆசிரியரைப் போக விடாமல் போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக, அதேபள்ளியில் 10 நாள்கள் பணியாற்ற ஆசிரியருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பகவான்(28). இவர், பணிநிரவல் காரணமாக வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆங்கில ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆசிரியர் பகவான் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்து அங்கிருந்து வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றதற்கான ஆணையை வாங்கிச் செல்ல முயன்றார். அப்போது, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள், ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்டு, நீங்கள் இப்பள்ளியை விட்டு போகக் கூடாது என்று ஆசிரியரின் கையைப் பிடித்துக் கதறி அழுதனர். மேலும், பள்ளியை விட்டு வெளியே செல்லாதவாறு ஆசிரியர் பகவானை மாணவர்கள் சூழ்ந்துகொண்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அன்பு செல்வம் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியர் அரவிந்த் மற்றும் 19 ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து, ஆங்கில ஆசிரியர் பகவான், அதே பள்ளியில் பத்து நாள்கள் பணிபுரிவதற்கு அனுமதி அளித்தார். இச்செய்தியால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.