திருவள்ளூர் அருகே இறுதிச் சடங்கு செய்ய மயான வசதி செய்து தர வேண்டுமென்று ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே நுங்கம்பாக்கம் பகுதி பொதுமக்கள் சார்பில் நகர் நல அமைப்பு சங்கத்தினர் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நுங்கம்பாக்கத்தில் எல்.எஸ்.எஸ்.நகர், சாரதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகர்களுக்கு மயான வசதியில்லாததால் , அருகில் உள்ள நுங்கம்பாக்கம் மயானத்துக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அப்போது பிரச்னை ஏற்படுகிறது.
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் முதியவர்கள் உயிரிழக்க நேரிட்டால் இப்பகுதி மயானங்களில் இறுதி சடங்குகள் செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் சொந்த கிராமங்களுக்குக் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறோம்.
எனவே நகர் நலன் கருதி மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், மயான வசதி அமைக்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் .