திருத்தணி அருகே, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாதர் மகன் அரிபாபு(43). இவர், திருத்தணி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மேல்திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் அவரது பைக் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அரிபாபு,திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர் புதன்கிழமை உயிரிழந்தார். விபத்து குறித்து திருத்தணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.