கும்மிடிப்பூண்டி அருகே செம்மரக் கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
எளாவூரை அடுத்த பெரியநத்தம் கிராமத்தில் செம்மரக்கட்டைகளை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில், ஆரம்பாக்கம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலீஸார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் 5அடி நீளமுள்ள 25 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் எடை 2 டன் ஆகும். தொடர்ந்து, செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக ரங்கநாதன் (50) மற்றும் அவரது மகன் தங்கராசு (23) ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்து செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, செம்மரக் கட்டைகள் எதற்காக, எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மாதர்பாக்கம் வனச் சரகர் திவான் பகதூர் விசாரணை நடத்தி வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.10லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.