ஆன்லைன் செலவினங்களை வழங்கக் கோரியும், கூடுதல் பொறுப்புகளை வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வலியுறுத்தியும் கிராம கணக்குப் புத்தகங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் துணை வட்டாட்சியர் வெண்ணிலாவிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.
திருத்தணி வட்டத்தில், திருத்தணி, செருக்கனூர், பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருவலங்காடு, மணவூர் ஆகிய ஆறு குறு வட்டங்கள் உள்ளன. இதில் மொத்தம் 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் வீதம் மொத்தம், 79 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 49 கிராம நிர்வாக அலுவலர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலரும் மற்ற கிராமங்களுக்கு கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆன்லைன் செலவினங்களை வழங்கக் கோரியும், கூடுதல் பொறுப்புகளை கவனிக்கும் நிர்வாக அலுவலருக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கணக்குகள் மற்றும் மடிக்கணினிகளை துணை வட்டாட்சியர் வெண்ணிலாவிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, திருத்தணி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் கட்டடங்களுக்கு மின்சார வசதி, இணையதள வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை விடுத்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை.
இதனால், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கூடுதல் பொறுப்புகளை கவனிக்க மாட்டோம் என்று கூறி 18 கூடுதல் கிராமத்து கணக்குகளையும், மடிக்கணினிகளையும் துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம் என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.