செங்குன்றம் அருகே இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் மல்லிமாநகர், பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் தென்னரசு(26). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஜெபக்குமார் (25)(படம்). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் ஜெபக்குமாரை, தென்னரசு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, புதன்கிழமை விளாங்காடுபாக்கம் விளையாட்டுத் திடல் வழியாக வீட்டிற்குச் சென்ற தென்னரசை, ஜெபக்குமார் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் தென்னரசு பலத்த காயமடைந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெபக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.