தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தேசிய சட்ட பணிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமிற்கு பள்ளி தலைவர் ப. ரங்கநாதன் தலைமை வகித்தார்.
பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன் வரவேற்றார். இதில், திருத்தணி சார்பு நீதிமன்ற நீதிபதி கபீர் கலந்து கொண்டு பேசும்போது, மாணவர்கள் சட்ட பாதுகாப்பு, பெண்கள் உரிமை, கல்வி உரிமை, போக்சோ சட்டம் ஆகியவை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை திருமணம் நடந்தால் திருமணம் நடத்தியவருக்கும், மணமகன், மணமகள், தாய், தந்தை ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும். மைனர் குழந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்டி அதனால் விபத்து ஏற்பட்டால் மைனர் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது வழக்குப் பதியப்படும்.
போக்குவரத்து சட்டங்கள் பற்றியும், சிவில் சட்டங்கள் பற்றியும், பெண்கள் சொத்துரிமைச் சட்டம் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு சட்ட அறிவு அவசியம் எனவும் நீதிபதி கபீர் அறிவுறுத்தினார்.
முன்னதாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி பேசிய சுதந்திரா பள்ளி மாணவிகளுக்கு, நீதிபதி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், வழக்குரைஞர்கள் பவானிமுருகன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் துரைகுப்பன் நன்றி கூறினார்.