சென்னை கொளத்தூரில் கட்டடப் பொறியாளர் வீட்டில் 40 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த கொளத்தூர் 39ஆவது ஜி.கே.எம்.காலனி ஜவகர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்(40). இவர் கட்டடப் பொறியாளராக இருக்கிறார்.
இந்நிலையில், ஜான் கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் குடும்பத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் சத்தம் கேட்டது. இதையடுத்து, ஜான், அவரது சகோதரர் குமார் ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் நகைப் பெட்டிகள் சிதறிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த பீரோவைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த கைபேசி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக ஜான் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வில்லிவாக்கம் சரக உதவி ஆணையர் முத்துமாணிக்கம், ஆய்வாளர் பிரகாஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ஜான் வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் இருந்த பீரோவையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். எனினும், அதில் பொருள்கள் எதுவும் இல்லாததால் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.