வெளிச்சந்தைகளில் உரங்கள் விலை அதிகரித்த நிலையிலும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பழைய விலைக்கே உரம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில், எப்போதும் போல் பழைய விலைக்கே உரங்கள் விற்கப்படுகின்றன. அதேபோல் காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் விற்கப்படும், "இப்கோ' நிறுவன உரங்களும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெளிச்சந்தையில் ரூ.1,360-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மூட்டை, டிஏபி உரம் ரூ.1,290-க்கும்,ரூ.1,040-க்கும், 20-20 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே வெளிச்சந்தையில் விற்பனை செய்வதை விட ரூ.50 முதல் ரூ.120 வரையிலேயே கூட்டுறவுச் சங்கங்களில் விலை குறைந்த அளவில் கிடைக்கிறது. அதனால் விவசாயிகள், விவசாயப் பணிகளுக்குத் தேவையான உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.