திருவள்ளூர் பகுதியில் உள்ள ஏரியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 மாட்டு வண்டிகளை கிராமிய போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் பகுதியில்உள்ள ஏரிகளில் அதிகாலை நேரங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னிக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் பகுதியில் ஏரி, கூவம் ஆற்றுப் பகுதிகளில் திடீர் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருவள்ளூர் நகர போலீஸார் சனிக்கிழமை அதிகாலை சேலை பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது, சேலை ஏரிச் சாலையில் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீஸார் வருவதை அறிந்து, மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பியோடி விட்டனர். இதையடுத்து, மணல் ஏற்றிய நிலையில் நின்றிருந்த 3 மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து, அடையாளம் தெரியாத 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.