தமிழக அரசு ஊழலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியகுப்பம் ரயில்வே நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர், காவல் துறை அதிகாரி ஆகியோரை பதவி நீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாநில சட்டப்பிரிவு மாநில இணைச்செயலாளர் இ.பரந்தாமன், நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன் உள்பட அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
பொன்னேரியில்...
பொன்னேரி, செப். 18: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொன்னேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்தார். திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு, கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொன்னேரி நகரச் செயலர் விஸ்வநாதன், மீஞ்சூர் நகரச் செயலர் மோகன்ராஜ், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.