விளை நிலங்கள் வளமாக இருக்கவும், அதிக விளைச்சல் கிடைக்கவும் மண் புழுக்கள் அவசியம் என்று சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பின் இயக்குநர் சரோஜா பேசினார்.
சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப், திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கான ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தியன. சினம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள் தலைமை வகித்தார். சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் நிறுவனப் பணியாளர் அமுதா முன்னிலை வகித்தார். சினம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எல்.திலகவதி வரவேற்றார்.
சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக்சன் குரூப் இயக்குநர் சரோஜா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகையில், வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கில் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துகிறோம்.
இதனால் மண்ணின் உயிரியல் பண்புகளில் மாற்றம் ஏற்பட்டு, மண்வளம் சீர்கெட்டு வருகிறது. விளை நிலங்கள் வளமாக இருக்கவும், அதிக விளைச்சல் கிடைக்கவும் மண்புழுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இது மண்வளத்தை நிலை நிறுத்தும். எனவே விவசாய நிலங்கள் வளமாக இருக்க மண்புழு அவசியம் என்பதை விவசாயிகள் மறக்கக் கூடாது என்றார்.
தொடர்ந்து, மண்புழு வளர்ப்பு, இயற்கை விவசாய முறைகள் குறித்து இயற்கை விவசாயிகள் சி.பரசுராமன், எம்.ஆறுமுகம் ஆகியோர் பேசினர். இந்த கருத்தரங்கில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு இலவசமாக மண்புழு உரம் வழங்கப்பட்டது.