செய்யாறு அருகே பூட்டிய வீட்டில் 8 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்யாறை அடுத்த ஏனாதவாடி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டன் (63). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்களுக்கும், மகளுக்கும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். கடைசி மகன் அசோக்குமார் மட்டும் தற்போது இவர்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கோதண்டன், சாந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை விவசாயப் பணிக்காக வயலுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த அசோக்குமார், வீட்டை பூட்டிவிட்டு, நியாயவிலைக் கடையில் மண்ணெண்ணெய் வாங்கச் சென்றார்.
சிறிது நேரத்துக்குப் பின்னர் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்கம் வழியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தெரு ஓரத்தில் தயார் நிலையில் இருந்த பைக்கில் தப்பிச் சென்றது தெரியவந்ததாம். மேலும், பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை அவர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து செய்யாறு காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டதுடன், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.