பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு
செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இளைஞர் உயிரிழந்தார்.
கீழ்பெண்ணாத்தூரை அடுத்த நெடுங்காம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சிவக்குமார் (25). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார்.
செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில், தும்பை கிராமம் அருகே வளைவுப் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு பைக் சிவக்குமார் சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில், பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எதிரே பைக்கில் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இலத்தீப், அவரது மனைவி மாலீ ஆகியோர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து செய்யாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.