உலக புத்தக தின விழாவை ஒட்டி, வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில், சிறப்பு புத்தகக் கண்காட்சி வந்தவாசி கிளை நூலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமை வகித்தார். கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார். ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.குமார் புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்ததுடன், முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார். நூலகத்தில் புதியதாக சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இரா.சிவக்குமார், உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
விழாவில் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், ஓய்வு பெற்ற மின்வாரியத் துறை அலுவலர் கே.சண்முகம், பள்ளி ஆசிரியர் சக்கரவர்த்தி, மூன்றாம் நிலை நூலகர்கள் பூ.சண்முகம், ஜோதி, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த புத்தகக் கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த அறிவியல், வரலாறு, விளையாட்டு, மருத்துவம், இலக்கியம், சிறுவர் கதைகள் உள்ளிட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. வரும் 27-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.