கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி கிளை நூலகம், செங்கம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள கிளை நூலகம் ஆகியவற்றில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
வில்வாரணி கிளை நூலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் சேகர் முன்னிலை வகித்தார். கிளை நூலகர் தேவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.
திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன், திருவண்ணாமலை மாவட்ட மைய நூலக நிர்வாகி வாசுதேவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நூலகத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினர்.
இதில், புலவர் கண்ணன், பாலசுப்பிரமணியன், வாசகர் வட்ட துணைத் தலைவர் பச்சையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, வினாடி - வினா போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செங்கம்: செங்கம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, நடைபெற்ற கண்காட்சியில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்குத் தேவையான நூல்கள் உள்பட ஏராளமான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் செங்கம் பகுதியைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர், புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வென்றவர்களுக்கு செங்கம் கிளை நூலகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், மணிவண்ணன் ஆகியோர் செங்கம் கிளை நூலகத்தில் புரவலர்களாக இணைந்தனர்.
நிகழ்ச்சியில் நூலகர்கள் இளவரசி, அய்யப்பன், நூலக பணியாளர் அபிதா மற்றும் வாசகர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.