மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 105 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலையை அடுத்த சின்னகாங்கியனூர் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் டி.ரமேஷ்குமார் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் தீர்த்தமலை முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் பார்த்தசாரதி வரவேற்றார்.
முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 62 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 15 பேருக்கு சிறு, குறு விவசாயிச் சான்று, 10 பேருக்கு பட்டா மாறுதல், ஒருவருக்கு விதவைச் சான்று உள்பட மொத்தம் 32 பேருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், வேளாண் அலுவலர் பழனி, உதவி வேளாண் அலுவலர் ஏ.கோவிந்தன், வருவாய் ஆய்வாளர் கே.மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போளூர்: போளூர் வட்டம், செம்மியமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு வட்டாட்சியர் புவனேஸ்வரி தலைமை வகித்து, பொதுமக்கள் 50 பேர் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
பின்னர், தகுதிவாய்ந்த 23 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு சிறு,குறு விவசாயிச் சான்று, பட்டா மாற்றச் சான்று உள்ளிட்டவற்றை வட்டாட்சியர் புவனேஸ்வரி வழங்கினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ரஞ்சனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனாபிரகாசம் மற்றும் பொதுமக்கள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
செங்கம்: செங்கத்தை அடுத்த மண்மலை, செ.நாச்சிப்பட்டு, கோலாந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாம் மண்மலை கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்த வருவாய்த் துறையினர், தகுதிவாய்ந்த 50 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் வழங்கினார். இதில், மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பத்மா, சங்கமித்ரா மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.